வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகள் பற்றி அல்ஜீரிய அதிபருடன் ஆலோசனை நடத்திய குடியரசு தலைவர் முர்மு..!!

அல்ஜியர்ஸ்: வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு நால்குவது குறித்து அல்ஜீரிய அதிபருடன் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆலோசனை நடத்தினார். அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகருக்கு சென்றடைந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு நேற்று முன்தினம் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்நாட்டு ஜனாதிபதி அப்தில்மட்ஜித் திபவுன் மற்றும் அவருடைய மந்திரி சபை உறுப்பினர்கள் குடியரசு தலைவர் முர்முவை வரவேற்றனர். இந்நிலையில், அல்ஜீரியாவில் உள்ள எல் மவுராடியா அரண்மனையில் அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுனை, ஜனாதிபதி முர்மு நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் பற்றி இருவரும் விவாதித்ததுடன், இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதியான முடிவெடுக்கப்பட்டது என முர்மு கூறியுள்ளார்.

குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அல்ஜீரியா நாட்டுக்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவுக்கு உறுதி கூறியதுடன், ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் வலுவான உள்ளார்ந்த ஈடுபாட்டை முர்மு மீண்டும் உறுதிப்படுத்தினார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

The post வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகள் பற்றி அல்ஜீரிய அதிபருடன் ஆலோசனை நடத்திய குடியரசு தலைவர் முர்மு..!! appeared first on Dinakaran.

Related Stories: