தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

தாம்பரம், அக்.14: வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (24). இவர், கடந்த 9ம் தேதி தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் மாயமானது தெரிந்தது. இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், இருசக்கர வாகன திருடில் ஈடுபட்டவர்கள், திண்டிவனம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார், இருவரையும் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், கடலூரை சேர்ந்த அப்பு (எ) அய்யனார் (29) மற்றும் திண்டிவனம் பகுதியை சேர்ந்த விஜய் (20) என்பது தெரிய வந்தது. இதில், அய்யனார் மீது பண்ருட்டி, விழுப்புரம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 8 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும்,

அவர் கடந்த 4 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவதும், விஜய் மீது திண்டிவனம், ரோசனை காவல் நிலையங்களில் 7 திருட்டு வழக்குகள் இருப்பதும், அவர் கடந்த 5 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

The post தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: