பாஜக ஒன்றிய அரசும், ரயில்வே அமைச்சகமும் ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: பாஜக ஒன்றிய அரசும், ரயில்வே அமைச்சகமும் ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (11.10.2024) இரவு சென்னை பெரம்பூர் வழியாக பிகார் மாநிலம் செல்லும் பாக்மதி அதி விரைவு தொடர் வண்டி, கவரைப்பேட்டை அருகில் நின்று கொண்டிருந்த சரக்கு போக்குவரத்து தொடர் வண்டியில் (கூட்ஸ்) மோதி, அதன் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்ற தகவல் கிடைத்த போதிலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதைகளில் தடம் மாற்றி விடப்பட்டதாலும் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் பாஜக ஒன்றிய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது:

நாட்டின் மிகப்பெரும் போக்குவரத்து பொதுத் துறையான ரயில்வே துறைக்கு தனி வரவு – செலவு தாக்கல் (பட்ஜெட்) செய்து வந்த முறையை மாற்றி, பொது வரவு – செலவு திட்டத்தில் சேர்த்து விட்டது, இதனால் அதன் மீது தனித்த கவனம் செலுத்தும் வாய்ப்பை பறித்து விட்டது. பாஜக ஒன்றிய அரசின் ரயில்வே துறை அமைச்சர் விபத்துக்கள் குறைந்து வருவதாக கூறுவதை, கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 638 விபத்துக்களில் சுமார் 800 பயணிகள் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ள விபரத்தை தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல் மறுக்கிறது. ரயில்வே நிர்வாகத்தில் பணியாளர்களை பெருமளவு குறைத்து, நவீன தொழில்நுட்பங்களை மட்டும் நம்பி நிற்பது விபத்துக்களை தடுக்க உதவவில்லை என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்.

இது தொடர்பாக உயர்மட்டக் குழுக்கள் அளித்த பரிந்துரைகளை ஒன்றிய அரசு அக்கறையுடன் செயல்படுத்த முன் வர வேண்டும். ஒரே முறையில் இயக்கப்படும் ரயில்களை விரைவு வண்டி, அதிவிரைவு வண்டி, சிறப்பு வண்டி என பல பெயர்களிலும், தட்கால், பிரிமியம் என்ற பெயர்களிலும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியிருப்பதும், முன்பதிவு பயணச்சீட்டுகளை ரத்து செய்வதிலும், நடைமேடை கட்டணங்களிலும் பயணிகள் தலையில் பெரும் சுமை ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் பயண பாதுகாப்பு உட்பட அனைத்து சேவை வழங்குவதிலும் படுமோசமான நிலையே நீடிக்கிறது. இந்த நிலையில் ரயில்வே சேவையை தனியாரிடம் வழங்கி, அரசு விலகிக் கொள்ள முயற்சிப்பது மக்கள் விரோத செயலாகும். ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்து, சேவைகளை மேம்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதை கைவிட்டு, பாஜக ஒன்றிய அரசும், ரயில்வே அமைச்சகமும் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post பாஜக ஒன்றிய அரசும், ரயில்வே அமைச்சகமும் ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: