ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடக்கிறது; ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே: சு.வெங்கடேசன் எம்.பி குற்றசாட்டு

சென்னை: ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடக்கிறது; ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே என சு.வெங்கடேசன் எம்.பி குற்றசாட்டு வைத்துள்ளார். அண்மையில் ஒடிசாவில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்துக்கு பின்னர் கவாச் தொழில்நுட்பம் குறித்தும், அதை செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்கள். இதனிடையே நேற்று இரவு சென்னை கும்மிடிப்பூண்டி பிரதான வழித்தடத்தில் கவரப்பேட்டை ரயில் நிலையம் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் சென்ற லூப் லைனில், மெயின் ரயிலுக்கு சிக்னல் மாறி வந்ததால் பெரிய விபத்து ஏற்பட்டது. அதாவது மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இதில் இரண்டு பெட்டிகளில் தீ பிடித்தது. இந்த விபத்தில் 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டது. உயிரிழப்பு ஏதும் இந்த விபத்தில் ஏற்படவில்லை. எனினும் சுமார் 19 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஒன்றிய இரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே . ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது? உயிர்சேதம் இல்லாத பெரும் நிம்மதி இருந்தாலும் , ஒவ்வொரு ரயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரயில்வே துறை என்ன தான் செய்யப்போகிறது? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடக்கிறது; ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே: சு.வெங்கடேசன் எம்.பி குற்றசாட்டு appeared first on Dinakaran.

Related Stories: