நடுக்கடலில் 18 மீனவர்களை தாக்கி ரூ.10 லட்சம் பொருட்கள் கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூரில் இருந்து 18 மீனவர்கள் 4 பைபர் படகுகளில் கடந்த 8ம் தேதி காலை 10 மணிக்கு மீன்பிடிக்க சென்றனர். 18 மீனவர்களும் கோடியக்கரையின் தென்கிழக்கே 15 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தனித்தனியாக தங்களது பைபர் படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட 2 படகுகளில் வந்த 10 இலங்கை கடற்கொள்ளையர்கள், 4 பைபர் படகுகளையும் வழிமறித்து மீனவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டினர். அப்போது படகில் இருந்த மீன்கள், வலைகள், செல்போன், ஜிபிஎஸ் கருவி, டீசல், பிடித்து வைத்திருந்த மீன்கள் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர். மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்து நேற்று காலை செருதூர் திரும்பினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கிராம பஞ்சாயத்தார்களிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து கிராம பஞ்சாயத்தார்கள் கீழையூர் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் செய்துள்ளனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், கண் இமைக்கும் நேரத்தில் வந்து, கத்தியை காட்டி மிரட்டி எங்களிடம் உள்ள பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுவிடுகின்றனர். இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை கடல் கொள்ளையர்களால் எங்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

The post நடுக்கடலில் 18 மீனவர்களை தாக்கி ரூ.10 லட்சம் பொருட்கள் கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம் appeared first on Dinakaran.

Related Stories: