அட்டப்பாடி புதூர் அருகே பூதயார் மலைப்பகுதியில் வளர்ந்த கஞ்சா செடிகள் தீ வைத்து அழிப்பு

பாலக்காடு : அட்டப்பாடி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூதயார் மலை பகுதிகளில் சட்டவிரோதமாக மர்ம நபர்கள் கஞ்சா செடிகள் பயிரிட்டதை அகழி கலால்துறையினர், வனத்துறையினர் கண்டு பிடித்து தீ வைத்து அழித்தனர். பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அகழி கலால்துறை அதிகாரிகளுக்கு பூதயார் மலைப்பகுதிகளில் மர்ம நபர்கள் கஞ்சா பயிர் செய்வதாக ரகசிய தகவல் வந்தது.

இதன்பேரில் கலால்துறை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், அதிகாரிகளான பிரமோத், சந்திரன், ரஜீஷ், சுதீஷ்குமார், நிதுன், அனூப், புதூர் பாரஸ்ட் ஸ்ஷேடன் பாரஸ்ட்டர் மணிகண்டன், பாரஸ்ட் வாட்சர்கள் கனகராஜ், விஜயா ஆகியோர் பூதயார் மலைகளில் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மலை உச்சியின் சமதள பகுதியில் சட்டவிரோதமாக மர்ம நபர்கள் கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து, 10 அடி உயரம் வளர்ச்சி பெற்ற 71 கஞ்சா செடிகளை பிடுங்கி தீயிட்டு நாசப்படுத்தினர்.இந்நிலையில் கஞ்சா பயிரிட்ட மர்ம நபர்கள் யாரும் பிடிபடவில்லை. கலால் துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் வருவதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் தப்பியோடி தலைமறைவாகி விட்டனர். கடந்த 5 மாதத்தில் புதூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட 7 கஞ்சா தோட்டங்களை வெட்டி நாசப்படுத்தியுள்ளனர்.

கடந்த 2024 ம் ஆண்டு ஜூன் 6 ம் தேதி முருகளா வனப்பகுதியில் பட்டிமலையில் கஞ்சா வேட்டை நடத்தியதில் 450 கஞ்சா செடிகள், ஜூலை 4 ம் தேதி சந்தயக்கல் மலையில் 611 கஞ்சா செடிகள், ஆகஸ்ட் 28-ம் தேதி இடவாணியில் உள்ள மலையில் 305 கஞ்சா செடிகள், செப். 13 ம் தேதி நாய் வெட்டு மலையில் 115 கஞ்சா செடிகள், செப்டம்பர் 14 ம்தேதி மேல் பூதயாரில் 261 கஞ்சா செடிகள் என கலால்துறை, வனத்துறை அதிகாரிகள் இணைந்து அழித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அட்டப்பாடி புதூர் அருகே பூதயார் மலைப்பகுதியில் வளர்ந்த கஞ்சா செடிகள் தீ வைத்து அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: