எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 25 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை..!!

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைபட்டினம் பகுதியில் இன்று காலை 200க்கும் மேற்பட்ட விசைப்படகில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர்.

அதைத்தொடர்ந்து 4 விசைப்படகையும் அதிலிருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்து நெடுந்தீவு கடற்பகுதி முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு விசாரணை செய்த பின் 25 மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழக கடலோர பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவது, சிறை பிடிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழில் நலிவடையும் சூழலில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 25 பேர் சிறைபிடிக்கபட்டது ஒட்டுமொத்த மீனவர்களுக்கிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

 

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 25 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை..!! appeared first on Dinakaran.

Related Stories: