ஆசிய கோப்பையில் அடைந்த தோல்விக்கு உலக கோப்பையில் பதிலடி தருமா இந்தியா? இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை

துபாய்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. அடுத்த போட்டியில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய இந்திய வீராங்கனைகள், பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கினர்.அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய, இந்திய அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில், இன்று இலங்கையை எதிர்கொள்ளும் இந்தியா, அக்.13ம் தேதி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

இலங்கை இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவிடம் மண்ணைக் கவ்வியுள்ளது. எனவே கவுரவம் காக்கும் முனைப்புடன் அந்த அணி களமிறங்குகிறது. ஜூலை மாதம் சொந்த மண்ணில் நடந்த ஆசிய கோப்பை பைனலில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதால், இலங்கை அணி சற்று நம்பிக்கையுடன் உள்ளது. அதே சமயம், அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி உறுதியுடன் உள்ளதால் இன்றைய ஆட்டம் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

* இரு அணிகளும் 23 டி20ல் மோதியுள்ளதில் இந்தியா 18-5 என முன்னிலை வகிக்கிறது.
* கடைசியாக மோதிய 5 போட்டியிலும் இந்தியா 3-2 என முன்னிலையில் உள்ளது.

The post ஆசிய கோப்பையில் அடைந்த தோல்விக்கு உலக கோப்பையில் பதிலடி தருமா இந்தியா? இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: