‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு ஐ.நா விருது சுகாதாரத்துறைக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள ‘‘மக்களைத்தேடி மருத்துவம்’’ திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது. ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்த திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். அதன்படி, ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவ சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம் தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024ம் ஆண்டிற்கான ‘United Nation Interagency Task Force Award’ என்ற விருது. அந்தவகையில், சிறப்பான முறையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி, கண்காணித்து, மேம்படுத்தி வரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், அவருக்கு துணை நிற்கும் துறை செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்த திட்டம் இன்னும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு பயனளிப்பதை தொடர்ந்து உறுதிசெய்வோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு ஐ.நா விருது சுகாதாரத்துறைக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: