2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வரும்: கிரிக்கெட் வாரிய தலைவர் நம்பிக்கை

லாகூர்: கடந்த 1996 உலக கோப்பைக்கு பிறகு எந்தவித ஐசிசி தொடர்களும் பாகிஸ்தானில் நடைபெறவில்லை. 2011 உலக கோப்பை தொடர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை கூட்டாக சேர்ந்து நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 2009ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, இலங்கை அணியினர் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனால் 2011 உலக கோப்பை தொடரை இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து நடத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு காரணங்களால் ஐசிசி தொடர்களை பாகிஸ்தானில் நடத்த தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி கூறுகையில், “நீண்ட இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்க உள்ள ஐசிசி தொடர் என்பதால் பலத்த பாதுகாப்புடன் தொடரை நடத்த ஆயத்தமாகி வருகிறோம்.

எனவே அடுத்த ஆண்டு அனைத்து நாடுகளும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என்பதால் நிச்சயம் இந்திய அணியும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு ஜூலைக்கு பிறகு 3 முறை பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாடியுள்ளதால் இம்முறை இந்திய அணி நிச்சயம் எங்களை ஏமாற்றாது’’ என்றார்.

The post 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வரும்: கிரிக்கெட் வாரிய தலைவர் நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: