கோவை அவிநாசி சாலையில் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!!

கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோவையில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி செயல்பட்டு வருகிறது. கோவையின் அடையாளமாக உள்ள பள்ளிகளில் ஸ்டேன்ஸ் பள்ளியும் ஒன்று.

இந்த பள்ளிக்கு இன்று காலை வந்த இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை அடுத்து பள்ளி நிர்வாகம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் பள்ளி வளாகத்திற்கு வந்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மைதானத்தில் அமரவைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் பள்ளி வளாகத்தில் நடத்திய சோதனையில் எந்த விதமான பொருட்களும் இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ச்சியாக கோவையை பொறுத்தவரை அடுத்தடுத்து இமெயில் மூலம் மிரட்டல் வருவது என்பது நடைபெற்று வருகிறது.

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முன்னாள் துணை குடியரசு தலைவராக இருந்த வெங்கையா நாயுடு வந்த போது கோவையில் உள்ள 3 ஓட்டல்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அடுத்தடுத்து வரக்கூடிய வெடிகுண்டு மிரட்டலால் காவல்துறையினர் மத்தியில் கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தி வரக்கூடிய நிலையில், இது போன்ற இமெயில் அனுப்புவது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கோவை அவிநாசி சாலையில் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.

Related Stories: