சாம்சங் நிறுவனத்துடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முதல்கட்ட பேச்சுவார்த்தை

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள் கடந்த மாதம் 9ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு, சங்க அங்கீகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் இணைந்து இந்த பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

முதல்வரின் ஆலோசனைப்படி நேற்று முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சாம்சங் நிறுவன மேலாளர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், “இந்த ஆலோசனையின் போது நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்கப் பயனுள்ள உரையாடலை நடத்தினோம்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்னையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசனும் இணைந்து, தொழிலாளர்களுக்கு நன்மையான தீர்வு கிடைப்பதற்கான முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். சாம்சங் நிர்வாகத்தினரும் அவர்களின் ஊழியர்களும் இணைந்து, எல்லா தரப்புக்கும் பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவார்கள் என உறுதியாக நம்புகிறோம்” என்றார்.

The post சாம்சங் நிறுவனத்துடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முதல்கட்ட பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: