ஓவியம் – சிற்பக் கலையில் சாதனைப் படைத்த 6 கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் கலைச் செம்மல் விருதுகள் அறிவிப்பு!!

சென்னை: ஓவியம் மற்றும் சிற்பக் கலையில் சாதனைப் படைத்த 6 கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் கலைச் செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் ஓவிய நுண்கலைக் குழு வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீனபாணி கலை வல்லுநர்களுக்கும் நுண்கலைத் துறையில் செய்துள்ள அரும்பெரும் சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருதும், தலா ரூ.1,00,000/- வீதம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

2024-2025ஆம் ஆண்டு கலைச்செம்மல் விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்வாளர்கள் கூட்டம் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் சே.ரா.காந்தி, இ.ர.பா.ப தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓவியர்கள் சு.சந்தானக்குமார், எம்.சேனாதிபதி, முனைவர் வி.மாமலைவாசகன், டி.விஜயவேலு, சேஷாத்திரி மற்றும் விஸ்வம் ஆகியோர் கொண்ட குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பின்வரும் 6 கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகள் வழங்க அரசாணை (நிலை) எண்.323, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, நாள்.16.09.2024 வாயிலாக ஆணையிடப்பட்டுள்ளது.

மரபுவழி ஓவியப் பிரிவில், ஓவியர் ஏ.மணிவேலு, மரபுவழி சிற்பப் பிரிவில் லே.பாலச்சந்தர் மற்றும் கோ.கன்னியப்பன், நவீனபாணி ஓவியப் பிரிவில் கே.முரளிதரன் மற்றும் ஏ.செல்வராஜ், நவீனபாணி சிற்பப் பிரிவில் ரா.ராகவன் ஆகிய கலைஞர்கள் கலைச்செம்மல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

The post ஓவியம் – சிற்பக் கலையில் சாதனைப் படைத்த 6 கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் கலைச் செம்மல் விருதுகள் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: