விஷம் கொடுத்தும் சாகாததால் கத்தியால் குத்தி இரண்டு மகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி: மனைவியின் தவறான நடத்தையால் விபரீதம்


மதுரை: மதுரை, யாகப்பா நகரை சேர்ந்தவர் சேதுபதி (35). பெயிண்டர். மனைவி ராஜேஸ்வரி. மகள்கள் ரக்‌ஷனா (7), ரக்சிதா (5). தம்பதியிடையே சில மாதங்களாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று காலை ராஜேஸ்வரி கம்ப்யூட்டர் வகுப்பிற்கு சென்றிருந்தார். மகள்கள் வீட்டில் இருந்தனர். அப்போது சேதுபதி, மகள்களின் வாயில் விஷத்தை ஊற்றி விட்டு தானும் விஷம் குடித்துள்ளார். இதில் மயங்கிய நிலையில் இருந்த இரு குழந்தைகளும் உயிருடன் இருப்பதைக் கண்டு கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். தொடர்ந்து குழந்தைகளின் கழுத்தை கம்பியைக் கொண்டு நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இரு குழந்தைகளும் இறந்தது உறுதியானதும், விஷம் அருந்தியும் இறக்காத நிலையில் சேதுபதி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். கம்ப்யூட்டர் வகுப்பிற்கு சென்று விட்டு திரும்பிய ராஜேஸ்வரி, குழந்தைகள் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததையும், கணவர் தூக்கில் தொங்கும் நிலையில் இருந்ததையும் பார்த்து சத்தம்போட்டார். தகவலறிந்து வந்த அண்ணாநகர் போலீசார், சேதுபதியை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் கூறும்போது, ‘‘ராஜேஸ்வரிக்கும், மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த திருமணமான உறவினர் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

3 மாதத்திற்கு முன்பு ராஜேஸ்வரி ஒரு மகளுடன் வெளியேற அந்த உறவினர் தனி வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். புகாரின்படி அண்ணாநகர் போலீசார் ராஜேஸ்வரியை மீட்டு குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர். இருந்தும் உறவினருடன் தொடர்பை மனைவி கைவிடாததால் மனமுடைந்த சேதுபதி, மகள்களை கொன்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். ராஜேஸ்வரியிடம் நடத்தப்பட்டு வரும் தொடர் விசாரணைக்கு பிறகே உண்மை தெரிய வரும்’’ என்றனர்.

The post விஷம் கொடுத்தும் சாகாததால் கத்தியால் குத்தி இரண்டு மகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி: மனைவியின் தவறான நடத்தையால் விபரீதம் appeared first on Dinakaran.

Related Stories: