திட்டமிட்டபடி 2025 ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வருமா? ஆமை வேகத்தில் நடைபெறும் மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணி: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

பொன்னேரி: மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால், அதனை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மீஞ்சூர்-நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, எல்.சி.16., ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக, காட்டூர், மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள 50 கிராமங்களை சேர்ந்தவர்கள் கடந்து செல்கின்றனர். இந்நிலையில், வாகன ஓட்டிகளின் சிரமங்களை தவிர்க்க, 2016ல் சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின்கீழ், மேற்கண்ட ரயில்வே கேட்டின் அருகே ரூ.67 கோடியே 95 ஆயிரம் மதிப்பீட்டில் நில எடுப்பு உள்ளிட்டவைகளுக்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ரயில்வே எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலத்திற்கான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

2021ல் பாலப் பணியின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதில் இழுபறி நீடித்து வந்தது. இதனையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு அணுகு சாலை அமையும் பகுதிகளில் இருந்த வீடு மற்றும் நில உரியாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அதை தொடர்ந்து, அங்கிருந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின், அணுகு சாலைக்கான பணிகள் துவங்கப்பட்டன. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அன்றைய எம்.பி. ஜெயக்குமார், பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் மற்றும் சென்னை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும், இந்த பாலமானது திருவொற்றியூர்-பொன்னேரி, பஞ்செட்டி மாநில நெடுஞ்சாலையில் துவங்கி, மீஞ்சூர்-காட்டூர் நெடுஞ்சாலையில் முடிகிறது. இப்பணிகள் வரும், 2025 ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீஞ்சூர் பஜார் பகுதிகளில் இருந்து ரயில்வே கேட்டு வரை பணிகள் தொடங்கவில்லை. மீஞ்சூர் ரயில்வே கேட்டில் இருந்து அரியன் வாயல் பணி பகுதி முழுவதும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மீஞ்சூர் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் மீஞ்சூர், அரியன்வாயல், கல்பாக்கம், புதுப்பேடு, கொரஞ்சூர் ரெட்டிபாளையம், தமிழ்கொரஞ்சூர், மவுத்தம்பேடு, செப்பாக்கம், தேவதானம், காணியம்பாக்கம், தோட்டக்காடு, மெரட்டூர், வெள்ளம்பாக்கம், குமரஞ்சேரி, சாலிப்பட்டு, திருவெள்ளைவாயல், நெய்தவாயல், வாயலூர், செங்கைழனீமேடு, ஊரணம்பேடு, வேளூர், காட்டூர், வஞ்சிவாக்கம், பிரளியம்பக்கம், கடப்பாக்கம், ஆண்டார் மடம், தாங்கள், சிறு பழவேக்காடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள்.

* தாமதம் ஏன்?
மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணி தொடர்பாக மூன்று முறை பணிக்கான மறு ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதால் பணிகள் நடைபெற தாமதமாகின்றன. மேலும், மீஞ்சூர் பஜாரில் இருந்து ரயில்வே கேட்டு வரை பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடம் என்பதால் அங்கு இருக்கும் வீடுகளுக்கும், கடைகளுக்கும் நஷ்ட ஈடு தொகை கொடுப்பதில் தாமதமாகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திட்டமிட்டபடி 2025 ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வருமா? ஆமை வேகத்தில் நடைபெறும் மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணி: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: