பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகி சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் : ஐகோர்ட் அதிரடி

சென்னை : பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக கருத்துகளை வெளியிட்ட பாஜக நிர்வாகி செல்வகுமாருக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பாஜக நிர்வாகி செல்வகுமார் தவறான தகவல் பரப்பி இருந்தார்.

இதனை மறுத்த கோயில் நிர்வாகம், பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கான நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே வாங்கப்படுவதாக தெரிவித்தது. இது தொடர்பாக வதந்தி பரப்பியதாக பழனி அடிவாரம் காவல்துறையில் பாஜக நிர்வாகிகள் செல்வகுமார் மற்றும் வினோஜ் பி செல்வம் மீது புகார் அளித்தது.புகாரைப் பெற்ற காவல் துறையினர், கோவையைச் சார்ந்த பாஜக தொழிற்பிரிவு மாவட்ட துணைதலைவர் செல்வகுமார் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் செல்வக்குமார் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, “பஞ்சாமிர்தம் தொடர்பாக தவறான தகவலை பரப்பிய வழக்கில் நிபந்தனைகளுடன் பாஜக செல்வகுமாருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்யும் முன் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். பாஜக நிர்வாகி செல்வகுமார் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்தை உடனடியாக நீக்க வேண்டும். அத்துடன், உண்மை தன்மையை உறுதி செய்யாமல் பதிவிட்ட கருத்து என்று சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் செல்வகுமார் நடந்தால் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற்ற உத்தரவிட நேரிடும். வாய்ச்சொல் வீரராக இல்லாமல் நிஜத்தில் சேவைகளை செய்யவேண்டும். பாஜக பிரமுகர் செல்வகுமார் தனது செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். காவல் நிலையத்தில் தவறாமல் கையெழுத்திட வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகி சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் : ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: