45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த மூவருக்கு ஊக்கத் தொகையாக ரூ90 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்தில், ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் இம்மாதம் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் 2 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய அணியை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி மற்றும் அணியின் தலைவரான நாத் நாராயணன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார். இவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ25 லட்சம் உயரிய ஊக்கத்தொகையாகவும்,

அணியின் தலைவரான நாத் நாராயணனுக்கு ரூ15 லட்சம் என மொத்தம் ரூ90 லட்சத்துக்கான் காசோலைகளை வழங்கிய தமிழ்நாடு முதல்வர், அடுத்து வரும் குளோபல் செஸ் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post 45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த மூவருக்கு ஊக்கத் தொகையாக ரூ90 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: