காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நள்ளிரவில் அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம், செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நள்ளிரவில் அரசு அதிகாரிகளுடன், கலெக்டர் கலைச்செல்வி மோகன், எஸ்பி சண்முகம் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆய்வு யெ்தனர். கோயில் நகரம், பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்திற்கு பல்வேறு மாநில, மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கார், பேருந்து மூலம் வருகின்றனர். இதுமட்டுமில்லாது, நாள்தோறும் கோயில் திருவிழாக்கள், அரசியல் கட்சி நிகழ்வுகள், திருமணம் நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் காஞ்சிபுரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதன்படி, காஞ்சிபுரத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், நேற்று முன்தினம் நள்ளிரவில் அதிகாரிகளுடன் களமிறங்கி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அரசு மதுபான கடை இடமாற்றம், சாலையோர மின் கம்பங்கள் ஆகியவற்றை அகற்றி, முதல்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.பின்னர், மின் வாரிய அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், மின்சார வாரிய அதிகாரிகள் ஆகியோரிடம், பூக்கடை சத்திரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரம் பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சென்னை, வேலூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு வரும் வாகனங்கள், சாலையோரம் நிறுத்தும் வகையில் அதற்கு இடையூறாக இருக்கும் மின் கம்பங்கள், பதாகைகள் உள்ளிட்டவைகளை அகற்றி, அவ்விடத்தில் நெரிசலை குறைக்கலாம். இதேபோல் செங்கழுநீரோடை வீதி, கம்மாளத் தெரு இணைப்பு பகுதிகளிலும் போக்குவரத்து குறைக்கவும், அப்பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடையால் அதிகளவு வாகனங்கள் வெளியே நிறுத்தப்படுவதால், அதனை வேறு இடத்திற்கு இடமாற்ற செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. இதில், கலெக்டர் கலைச்செல்வி மோகன், போலீஸ் எஸ்பி சண்முகத்துடன் நடந்தே சென்று, அப்பகுதி முழுவதும் சுமார் 1 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களின் குறைகள் குறித்து அனைத்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

The post காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நள்ளிரவில் அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: