ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு; சாலையில் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டிரைவர் படுகாயமடைந்தார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி நுகர்பொருள் வாணிப கிடங்கில், கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரை சேர்ந்த குழந்தைசாமி மகன் ஜோசப்ராஜ் (எ) ரகு(50) என்பவர், நேற்று மதியம் லாரியில் 550 அரிசி மூட்டைகள் ஏற்றிக்கொண்டு பள்ளிப்பட்டு நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். சுமார் மாலை, 5:30 மணிக்கு திருத்தணி – சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை ஆர்.கே.பேட்டை அருகே செல்லாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனைகண்ட அவ்வழியாக சென்றவர்கள், கால், கை மற்றும் உடம்பில் காயமடைந்த ரகுவை மீட்டு, சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்ததும் ஆர்.கே.பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலையோரம் கவிழ்ந்திருந்த லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை, வேறு ஒரு லாரியின் மூலம் பள்ளிப்பட்டு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு; சாலையில் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: