ரெட்டியார்சத்திரம் அருகே 10  மயில்கள் விஷம் வைத்து கொலை?

ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் அருகே 10க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே பழக்கனூத்து ஊராட்சி பொட்டிநாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாயிகள் மானாவரியாக சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் மயில்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றன. அவை கூட்டம், கூட்டமாக விவசாய நிலங்களில் இரை தேடி திரிவது வழக்கம். இவ்வூரின் தெற்கு ஓடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 10க்கும் மேற்பட்ட மயில்கள் ஆங்காங்கே இறந்து கிடந்தன.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் விஷம் வைத்து யாரேனும் என கொன்றிருக்கலாம் என கருதி கன்னிவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ரேஞ்சர் ஆறுமுகம், வனவர் அய்யனார் செல்வம் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மயில்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த நடராஜன் தோட்டத்தில் இறந்து கிடந்த மயில்களை ஓடையில் தூக்கி வீசியதாக தெரிகிறது. இதையடுத்து வனத்துறையினர் நடராஜன் மற்றும் சந்தேகத்தின்பேரில் முருகன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரெட்டியார்சத்திரம் அருகே 10  மயில்கள் விஷம் வைத்து கொலை? appeared first on Dinakaran.

Related Stories: