மலையாள நடிகை பலாத்கார வழக்கு ஏழரை வருடங்களாக சிறையில் உள்ள சுனில்குமாருக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு: கேரள அரசுக்கு கண்டனம்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரியில் திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும்போது கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கொச்சி போலீசார், பாதிக்கப்பட்ட நடிகையிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்த சுனில்குமார் என்பவர் உள்பட 7 பேரை கைது செய்தனர். சம்பவம் நடந்த ஒரு சில நாட்களிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியது மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான திலீப் என தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 6 வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரில் நடிகர் திலீப் உள்பட 7 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால் வழக்கில் முதல் எதிரியான சுனில்குமாருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. கடந்த ஏழரை வருடங்களுக்கு மேலாக இவர் எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சுனில்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ். ஓக்கா, பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்க கேரள அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

சுனில்குமாருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை நடவடிக்கைகள் பாதிக்கும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். நேற்றும் விசாரணை தொடர்ந்தது. கேரள அரசுத் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், சுனில்குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். ஜாமீனுக்கு நிபந்தனைகள் விதிப்பது குறித்து விசாரணை நீதிமன்றம் தீர்மானிக்கலாம். இதற்காக ஒரு வாரத்தில் சுனில்குமாரை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். என நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

The post மலையாள நடிகை பலாத்கார வழக்கு ஏழரை வருடங்களாக சிறையில் உள்ள சுனில்குமாருக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு: கேரள அரசுக்கு கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: