சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அறிவிக்கப்படும்: அமித்ஷா

புதுடெல்லி: கடந்த 2014 முதல் 2019ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் ஒன்றியத்தில் ஆட்சி செய்த பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடி 3வது முறையாக கடந்த ஜூன் 9ம் தேதி பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜ கூட்டணி அரசு தற்போது 100 நாள் ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இந்த முதல் 100 நாள் ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்து ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர்.

இதில் அமித்ஷா கூறியதாவது: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தனது முதல் 100 நாட்களில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு ஆட்சிக் காலத்திற்குள் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு ஒட்டுமொத்த தேசமும் முன்வர வேண்டும். மணிப்பூரில் நிரந்தர அமைதிக்காக மெய்டீஸ், குக்கி ஆகிய இரு சமூகத்தினரிடமும் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நிலைமையை எங்களால் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

கடந்த 3 நாட்களாக அங்கு எந்த வன்முறையும் நடக்கவில்லை. கொரோனா தொற்றால் தாமதமாகியுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். தொடர் ரயில் விபத்துகள் தொடர்பான மூல காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். இதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. ரயில் விபத்துகளை ஏற்படுத்தும் எந்த சதியும் நீண்ட காலம் நீடிக்காது இவ்வாறு அவர் கூறினார்.

The post சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அறிவிக்கப்படும்: அமித்ஷா appeared first on Dinakaran.

Related Stories: