மீன ராசிக்காரர்களின் இல்லக்கனவை நனவாக்கும் இறைவன்

பன்னிரண்டு ராசிகளிலேயே கடைசியாக வருவது மீனராசி. இருப்பதிலேயே ஆழமான ராசி. அதனாலேயே நீங்கள் அத்தனைக்கும் ஆரம்பத்தில் ஆசைப்படுவீர்கள்; ஆனால் எதுவும் அமையும்போது அமையட்டும் என விட்டுவிடுவீர்கள். வீடு வாங்கவேண்டுமென்ற கனவு உங்கள் ஆழ்மனதில் அசையாமல் அமர்ந்திருக்கும். ஆனால், அதற்காக அலட்டிக் கொள்ள மாட்டீர்கள். ‘‘வாங்குற சம்பளத்தில் வீட்டு லோன்ல சிக்கினா கையில பெரிசா பணம் மீறாது. அப்புறம் அன்றாட செலவுக்கே திண்டாட வேண்டியிருக்கும். அதனால வேற கம்பெனி மாறிட்டு அதுல ஏதாவது கூடுதலா சம்பளம் கிடைச்சா அப்புறம் யோசிக்கலாம்’’ என்பீர்கள். திருமணத்திற்கு முன்பு உங்கள் பெயரில் வீடோ, வீட்டு மனையோ வாங்காமல் இருப்பது நல்லது.

உங்களுக்கு கட்டிட ஸ்தானாதிபதியாக வரும் புதனே மனைவிக்குரிய கிரகமாகவும் வருவதால், நல்ல வீடு அமைந்தால், நல்ல மனைவி அமைய வாய்ப்பில்லாமல் போகும். அதனால், வாழ்க்கைத்துணை வந்த பிறகு வீட்டைப் பற்றி யோசியுங்கள். ‘வீடு வாங்காமயே போயிடுவோமோ’ என்று பயப்படாதீர்கள். மீன குரு தாமதப்படுத்தினாலும், தவிக்க வைக்க மாட்டார். பூமிகாரகனாகிய செவ்வாய் உங்களின் வீட்டை நிர்ணயிக்கின்ற புதனுக்குப் பகை. மேலும், உங்களின் ராசிக்கு அதிபதியான குருவுக்கு செவ்வாய் நட்பாக வருகிறது.

அதனால், எப்படியேனும் சொந்த வீடு அமைந்துவிடும். ஆனால், ‘அதுவா வந்தா வரட்டும்’ என்கிற அடிப்படை மனோநிலையை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள். ‘கையில காசு சேரட்டும்னு காத்திருந்தோம்னா காலம் பூரா உட்கார வேண்டியதுதான்’ என்று நண்பர்கள் நெருக்கும்போது வீடு உங்களை நெருங்கி வரும். மீனத்தில் பூரட்டாதி நான்காம் பாதமும், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களும் இடம் பெறுகின்றன.

முதலில் பூரட்டாதி நான்காம் பாதத்தைப் பார்ப்போம். இந்த ராசியிலேயே அதிர்ஷ்டசாலி நீங்கள்தான். ‘‘கல்யாணம் முடிஞ்ச கையோட புது வீட்டுல குடித்தனம் பண்ணப்போயிருக்காங்க’’ என்று பெருமையாகப் பேசும்படி வாழ்க்கை அமையும்.

‘‘கல்யாணம் பண்ணினா புது வீட்டுல போய்த்தான் வாழணும்னு உறுதியா இருந்தேன்’’ என்று உங்களில் சிலர் சொல்வீர்கள். வீடு சிலருக்கு திடீரென அமையும். காலையில போன்… மதியம் அட்வான்ஸ்… என்று உங்களுக்கே தெரியாமல் நிகழ்ந்துவிடும். மத்திய வயதைத் தாண்டும்போது, இரண்டு வீடுகளுக்காவது உள்ளுக்குள் திட்டமிருக்கும். உங்களுக்குத் தடையே சுற்றுப்புறச் சூழ்நிலைதான். ‘‘ரெண்டு வீடு தள்ளி குப்பைக்கூளமா இருக்கு. அங்க போய் எப்படி வாங்குறது’’ என்று தவிர்ப்பீர்கள்.

உங்களில் பலர் இதனாலேயே, நகரத்திற்கு அப்பால் நாற்பது கிலோமீட்டராக இருந்தாலும் மரங்கள் சூழ வீடு வாங்குவீர்கள். 39 வயதுக்குப் பிறகுதான் எல்லாமும் அமையும். 51, 54, 55, 60, 64 வயதுகளில் ஒன்றுக்கு இரண்டாக வாங்குவீர்கள். மேலும், 25 முதல் 40 வரை குருதசை நடைபெறும்போது, உங்களின் சக்திக்கு மீறி வாழ்வின் உச்சத்தைத் தொடுவீர்கள். மன்னர்கள், சந்நியாசிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயரில் தெருக்கள் பெயர் இருந்தால், உங்களுக்கு நல்லதாகும். பேருக்காவது பூர்வீகச் சொத்து இருக்கட்டுமே என்று நினைப்பீர்கள். வக்கீல், ஓய்வுபெற்ற நீதிபதி, ஆசிரியர் போன்றோர் உங்களின் எதிர்வீடு, பக்கத்து வீடுகளில் இருப்பார்கள்.

எப்போதுமே வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் பெயரில் இடத்தை வாங்குங்கள். அதற்குப் பிறகு வேண்டுமானால் உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். நேரடியாக உங்கள் பெயரில் வாங்கினால் தங்காது. வீட்டின் தலைவாசல் தெற்கு, தென்கிழக்கு திசை நோக்கி அமையட்டும்.

நீங்கள் வசிக்கும் ஊரின் தெற்குப் பகுதியில் வீடு அமைந்தால், அதிர்ஷ்டத்தைத் தரும். செம்மண், மணல் பூமியாக இருப்பின் நல்லது. உங்களுக்கு எல்லா தளங்களுமே ஏற்றதாகும். அஸ்வினி, பூசம், மகம், அனுஷம், அவிட்டம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திர நாட்களில் பத்திரப் பதிவையும் கிரகப் பிரவேசத்தையும் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக உத்திரட்டாதி நட்சத்திரம் வருகிறது. உங்களின் ராசியாதிபதியாக குரு பகவான் வருகிறார். நட்சத்திர அதிபதி சனி பகவான். பூமிகாரகனாகிய செவ்வாய்க்கு சனி பகை என்றாலும், உங்கள் ராசியாதிபதியான குருவுக்கு செவ்வாய் நட்பு கிரகம். எனவே கொஞ்சம் முயற்சித்தாலே வீட்டை எளிதாக வாங்கிவிடலாம். திருமணம் முடிந்தவுடன் வீட்டுக்கனவு பிரமாண்டமாக இருக்கும். ‘தகுதிக்கு மீறி ஆசைப்படுகிறோமோ’ என்று வீட்டுக் கனவை அடிமனதில் அழுத்தி வைப்பீர்கள். ஆனால், 33, 37, 41, 42 வயதுகளில் திடீர் வாய்ப்புகள் வரும். நீங்கள் எங்கு வீடு வாங்கினாலும், குடிசைப் பகுதிகள் நிச்சயம் இருக்கும். மருத்துவமனை, காவல் நிலையம் போன்றவற்றுக்கு பக்கத்தில் வீடு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி அமைந்தால் உடல்நலக் குறைவு, சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். வழிபாட்டு மன்றம், பஜனைக்கூடம், மடம், வங்கி, பிள்ளையார் கோயில் போன்றவற்றுக்கு அருகே இருந்தால், வீட்டில் வளம் கொழிக்கும்.

வடகிழக்கு, தெற்கு பக்கமாக வீட்டின் தலைவாசல் இருந்தால், ரொம்ப நல்லது. இதே திசையில் ஊரில் இடமாகவோ வீடாகவோ கிடைத்தால், வாங்கத் தயங்காதீர்கள். அபார்ட்மென்ட்டில் தரைத் தளத்தில் வீடு அமைந்தால் தவிர்த்துவிடுங்கள். பூர்வீகச் சொத்தில் ஒரு பாதியை விற்றுவிட்டு வேறிடத்தில் வீடு வாங்குவீர்கள். கட்டிடகாரகனான சுக்கிரன் உங்கள் நட்சத்திர நாயகனான சனிக்கு அதிநட்பாக இருப்பதால், கேட்ட இடங்களில் பணம் கிடைக்கும். அதே சமயம், தனியார் வங்கிக் கடன்கள் எளிதாக கிடைக்கும்.

விளை நிலமா, வீடு கட்ட அனுமதியுண்டா, தாய்ப் பத்திரம் சரியாக இருக்கிறதா என்பதையெல்லாம் சரிபார்த்துக் கொள்ளுங்கள். ரோகிணி, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், உத்திராடம், திருவோணம், ரேவதி போன்ற நட்சத்திரத்தில் புதுமனை புகுவிழாவையும், பத்திரப் பதிவையும் வைத்துக் கொள்ளுங்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், ‘‘வாங்கினா அந்த ஏரியாவுலதான் வாங்குவேன். அந்த பில்டர் கட்டற வீடுதான் எனக்குப் பிடிக்கும்’’ என்று ஆர்ப்பரிப்பீர்கள். ‘‘வீட்டவிட்டு வெளியே போனால், தெருமுனையிலயே பெரிய சூப்பர் மார்க்கெட், ரெண்டு தெரு தள்ளினா பசங்களுக்கு ஸ்கூல்… இதைவிட வேறென்ன வேணும்’’ என்று பெருமை பொங்கப் பேசுவீர்கள். ‘‘வீடு முடிச்சவுடனே சாவி கொடுக்கறோம்’’ என்று சொல்வதை ஏற்காது, வீடு வளர வளர அருகிலிருந்து பார்த்துப் பார்த்துக் கட்டுவீர்கள். ‘‘லேட்டஸ்ட்டா மார்க்கெட்டுக்கு வந்திருக்கிற மார்பிள்ஸ் இது’’ என்றால் மறுக்காது வாங்கிவிடுவீர்கள். வீட்டை கண்ணாடி மாதிரி துடைத்து துடைத்து வைத்துக் கொள்வீர்கள். உங்கள் நட்சத்திர நாயகனான புதனுக்கு குரு கொஞ்சம் ஆகாதவராக இருந்தாலும், கட்டிடகாரகனான சுக்கிரனுக்கு நட்பாக இருப்பதால், எளிதில் வங்கிக் கடன் கிடைக்கும்.

ஆனால், உங்களுக்கு உந்து சக்தியாக யாரேனும் இருக்க வேண்டும். இல்லையெனில் வீடு வாங்க வேண்டுமென்கிற ஐடியாவே வராது. வீட்டை வாங்குவதற்கு முன்பு எல்லா டாக்குமெண்ட்ஸும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். தனி வீடு கட்டத்தான் பெரும்பாலும் விரும்புவீர்கள். கீழே கார் பார்க்கிங்விட்டு, தூணை ஏற்றி முதல் மாடியாகக் கட்டுவீர்கள். முதல் வீட்டை வாங்கிய உடனேயே, ‘இது சரியில்லை… அது சரியில்லையே…’ என்று திருப்தியில்லாது இருப்பீர்கள். மீண்டும் கட்டிய வீட்டை ரீமாடல் செய்வீர்கள். 27லிருந்து 35 வயதுக்குள் வீடு அமையும். பள்ளி, விளையாட்டுத் திடல், டியூஷன் சென்டர், பெட் கிளினிக், தபால் நிலையம் போன்ற இடங்களுக்கு அருகில் வீடு அமைவது நல்லது.

மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து அழகு பார்ப்பீர்கள். அதேபோல வீட்டிற்கு அருகே இடம் கிடைத்தால் பேட்மின்டன், டென்னிஸ் மைதானம் அமைப்பீர்கள். வடக்கு, வடமேற்கு, தென் கிழக்கு திசைகளை நோக்கி தலைவாசலை அமையுங்கள். நீங்கள் வசிக்கும் ஊரில் அந்த திசையில் வரும் இடங்கள் வந்தால், வாங்கிப் போட முயற்சியுங்கள்.

அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், அனுஷம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் புதுமனை புகுவதையும், பத்திரப் பதிவையும் வைத்துக்கொள்ளுங்கள். மீன ராசிக்கு வீட்டு யோகத்தை நிர்ணயிப்பவர் மிதுன புதன். மிதுனம் என்றாலே இரட்டை என்பது பொருள். புதன் உங்களின் இல்லக்கனவை நிறைவேற்றுபவராக வருவதால், புதனுக்கு சக்தியைக் கொடுக்கும் பெருமாளை வணங்குவது மிகவும் நல்லது. இங்கே மிதுனம் என்கிற இரட்டைக்கு இரட்டை பெருமாள் அருளும் தலம் எனில் உங்கள் அலைவரிசைக்கு அது ஏற்றதாகும். எனவே இரட்டை திருப்பதி என்றழைக்கப்படும் திருத்தொலைவில்லி மங்கலம் கோயிலை தரிசித்து வாருங்கள். ஒன்றுக்கு இரண்டாக வீட்டையும் வாங்குவீர்கள். அருகருகே இரு கோயில்கள் அமைந்துள்ள திவ்யதேசம் இது.

அரவிந்தலோசனன், தேவபிரான் எனும் திருநாமங்களோடு பெருமாள் தனித்தனி கோயில்களில் சேவை சாதிக்கிறார். திருநெல்வேலியிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. கடந்த பல வாரங்களாக வீட்டு யோகத்தைப் பார்த்தோம். குடியிருக்க வீடும் கொஞ்சி மகிழக் குழந்தையும் இருந்தால்தான் வாழ்வு இனிக்கும்; முழுமை பெறும். கையில் காசு இருந்தால் வீட்டைக் கட்டி விடலாம்; ஆனால் ‘மழை பொழிவதும் மகவு பிறப்பதும் மகேசன் கையில்’ என்பது ஆன்றோர் வாக்கு. பெண்ணின் கருவறையையே குடியிருந்த கோயில் என ஞானியர் சொல்வர். அப்படிப்பட்ட கருவறைக்கும் கிரகங்களுக்கும் தொடர்புண்டு. அது என்ன என்பதை அடுத்த செவ்வாய் அன்று காணலாம்.

The post மீன ராசிக்காரர்களின் இல்லக்கனவை நனவாக்கும் இறைவன் appeared first on Dinakaran.

Related Stories: