ஊட்டி தாவரவியல் பூங்கா வளைவுகளில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல்லாயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியின்போது, பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, தாவரவியல் பூங்கா புல் மைதானங்களில் பிரம்மாண்டமான மலர் கோபுரங்கள், பல்வேறு வகையான அலங்காரங்கள் மற்றும் நுழைவு வாயில் பகுதியில் 10க்கும் மேற்பட்ட அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு, அதில் பல்வேறு வகையான கொய்மலர்கள் கொண்டு அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்வதும் மட்டுமின்றி, அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்வது வாடிக்கை.

இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த மலர் காட்சியின்போது அமைக்கப்பட்ட அலங்கார வளைவுகள் அகற்றப்படாமல் இருந்தது. தற்போது இரண்டாம் சீசன் துவங்கியுள்ள நிலையில், அந்த அலங்கார வளைவுகளுக்கு வர்ணம் பூசப்பட்டு அதில் பல்வேறு வகையான மலர் செடிகள் மற்றும் அலங்கார தாவரங்களைக் கொண்ட தொங்கும் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

The post ஊட்டி தாவரவியல் பூங்கா வளைவுகளில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம் appeared first on Dinakaran.

Related Stories: