ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: கோவையில் நடந்த சம்பவத்திற்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், வானதி சீனிவாசன் எம்எல்ஏவும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில் சிறு தொழில், குறுதொழில் பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரி மிகப் பெரிய சுமையாக உள்ளது. 75 சதவீத தொழிலாளர்கள் நடுத்தர தொழிலில் தான் பணியாற்றி வருகின்றனர். அந்த வாய்ப்புகளை அளிக்கும் தொழில் அதிபர் ஒருவர்தான் கோயம்புத்தூரில் கேள்வி கேட்டுள்ளார். பல்வேறு வரிகள் இருப்பதால் அவற்றை மாற்றி மக்களுக்கு சிரமம் இல்லாமல் வரியை போடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதில் தவறு ஏதும் இல்லை. இதற்கு நிதியமைச்சர் பதில் சொல்லி இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் விரோதியாக பிரதமர் நினைக்கிறார். அதே போல் தான் நிர்மலா சீதாராமனும் உள்ளார். கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் கேட்டது நியாயமான கேள்வி. சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒரே வரி தான். இந்தத் திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்தோம். ஆனால் மோடி அரசாங்கம் அதை மாற்றி விட்டது. அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால் அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை வற்புறுத்தி மன்னிப்பு கேட்க செய்துள்ளது தான். சுதந்திரமாக ஒருவர் கருத்தை சொல்ல முடியாத நிலையை பாஜக உருவாக்கி உள்ளது. நடந்த சம்பவத்திற்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: நாராயணசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: