வீடு கட்டுவதற்கான நிதி உதவி திட்டம் தொழிலாளர்களின் மனுக்களை பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தொழிலாளர் நலன் துறை செயலாளர் உத்தரவு

சென்னை: சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் ஆணையரகத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் திறனாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார். தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய செயலாளர் (கூடுதல் பொறுப்பு) யாஸ்மின் பேகம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரிய செயலாளர் திவ்வியநாதன் மற்றும் அனைத்து கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், தொழிலாளர் இணை ஆணையர்கள், தொழிலாளர் உதவி ஆணையர்கள் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மற்றும் தொழிலாளர் துறையின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் வீரராகவ ராவ் பேசியதாவது: தொழிலாளர் துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில், தொழிலாளர்கள் பதிவு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற்று வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் விபத்து ஊனம், மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
18 வயது முதல் 60 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலாளர்கள், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பலன் பெற்று வருகின்றனர். தொழிலாளர்கள் அளிக்கும் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்யவும் சிறு காரணங்களுக்காக மனுக்களை நிராகரித்து திருப்பி அனுப்பாமல் மனுதாரரை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை சரி செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தில் பெறப்படும் மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து அவர்களுக்கு நிதி உதவி வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவில் வெளிமாநில கட்டுமான தொழிலாளர்களை வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

 

The post வீடு கட்டுவதற்கான நிதி உதவி திட்டம் தொழிலாளர்களின் மனுக்களை பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தொழிலாளர் நலன் துறை செயலாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: