ஊத்துக்கோட்டை பகுதியில் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்ட கால்வாய் சிலாப்புகள் உடைந்து சேதம்

 

ஊத்துக்கோட்டை, செப்.10: ஊத்துக்கோட்டை கிருஷ்ணா கால்வாய் முதல் கண்ணன் கோட்டை புதிய நீர்த்தேக்கம் வரை கட்டப்பட்ட கால்வாய், மழையால் சிமென்ட் சிலாப்புகள் உடைந்து, சேதமடைந்துள்ளது. கும்மிடிபூண்டி அருகே, கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை கிராமங்களை இணைத்து அதிமுக ஆட்சியில் ரூ.330 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் கடந்த 2014ம் ஆண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் விவசாய நிலங்களை அழித்து பணிகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டால் அந்த தண்ணீர் தாமரைக்குப்பம் பகுதியிலிருந்து, திருப்பி விடப்பட்டு கரடி புத்தூர் வழியாக கண்ணன் கோட்டை நீர்தேக்கத்திற்கு செல்லும். இந்நிலையில், கடந்த வருடம் நவம்பர்-டிசம்பரில் மிக்ஜாம் புயல் மழையால் தாமரைக்குப்பம்-கண்ணன் கோட்டை இடையில் செஞ்சியகரம் பகுதியில் அமைக்கப்பட்ட கால்வாய் சிமென்ட் சிலாப்புகள் உடைந்து சேதமடைந்தது.

மேலும், கால்வாயின் கரை ஓரத்தில் இருந்த மண் சரிந்து கால்வாய் தூர்ந்து விட்டது. இதனால், அந்த கால்வாயின் நுழைவு பகுதியில் தண்ணீர் கால்வாய் நிரம்பி தேங்கி நிற்கிறது. அது மட்டுமல்லாமல், கரைகளும் ஆங்காங்கே சேதமடைந்து கிடக்கிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஊத்துக்கோட்டை பகுதியில் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்ட கால்வாய் சிலாப்புகள் உடைந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: