69% இடஒதுக்கீட்டை காப்பாற்ற சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம்: அன்புமணி பேட்டி

சேலம்: பாமக தலைவர் அன்புமணி எம்பி சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்டு, ரத்தாகியிருப்பது அனைவருக்கும் தெரியும். மதுரை உயர்நீதிமன்ற கிளை கூறிய 7 காரணங்களில், 6 காரணங்கள் தவறானது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தரவுகளை சேகரித்து நியாயமான இடஒதுக்கீடு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதை கூறியிருக்கிறது.

115 சமுதாயத்தினரும் உரிய பலனை அடைய, சமூக பின்தங்கிய நிலை மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் தீர்வு காண வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம். அது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி. அதில், 69 சதவீத இடஒதுக்கீடு ரத்து என தீர்ப்பு வந்து விட்டால், தமிழ்நாட்டில் பெரும் பிரச்னையாகி விடும். அதனால், 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்றிக் கொள்ள சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post 69% இடஒதுக்கீட்டை காப்பாற்ற சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம்: அன்புமணி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: