புனல் மின்நிலைய உற்பத்தியை பெருக்க சிறுபுனல் மின் திட்ட கொள்கை-2024 வெளியீடு: அரசு தகவல்

சென்னை: புனல் மின் நிலைய உற்பத்தியை பெருக்கும் விதமாக தனியார் பங்களிப்புடன் உள்ளூர் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலான சிறுபுனல் மின் திட்ட கொள்கை 2024ஐ தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, எரிசக்தித்துறை செயலர் (பொறுப்பு) பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணை: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அதிரிக்கும் நோக்கில் தமிழக அரசு, 100 கிலோவாட் முதல் 10 மெகாவாட் வரையிலான மின் நிலைய திறன் கொண்ட சிறு புனல் மின் திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. உள்ளூர் மின் உற்பத்திக்கான வாய்ப்பாகவும், ஊரகப் பகுதிகளில் மின் தேவையை பூர்த்தி செய்யவும் இந்த திட்டங்கள் பயன் தருகின்றன. இந்த சிறுபுனல் மின் திட்டங்கள், குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், எளிதான மற்றும் நிலையான எரிசக்தி வளமாகவும் இருக்கிறது.

மேலும், இந்த முயற்சியானது உள்ளூர் மின் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் கிராமப்புற மின்மயமாக்கலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சிறிய நீர்நிலை திட்டங்கள் குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்துடன் நம்பகமான மற்றும் நிலையான எரிசக்தி ஆதாரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொள்கை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் மற்றும் 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும், அதன் பிறகு அது மதிப்பாய்வு செய்யப்படும். இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இந்த சிறு புனல் திட்டங்களை மேம்பாட்டாளர்கள் தங்கள் சொந்த தேவைக்கும், அரசுக்கு விற்பனை செய்யவும், புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்முதல் தேவையை பூர்த்தி செய்யவும் உதவும் என தமிழ்நாடு எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்த கொள்கையானது, கார்பன் உமிழ்வை குறைத்து, புதுப்பிக்கத்தக்க மற்றும் தரமான மின்வளத்தை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும். இந்த திட்டம் கால்வாய்கள், ஆறுகள், ஓடைகளில் இருந்து தடையற்ற மின்சாரம் கிடைப்பதை ஊக்குவிக்கும். நிலக்கரி உள்ளிட்டவற்றை நம்பியிருப்பதை குறைக்கும். சிறுபுனல் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான ஊக்கச் சலுகைகள் அளிப்பதன் மூலம் தனியார் பங்களிப்பை ஈர்க்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்கும். சிறு புனல் மின் திட்டங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும். பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் குறித்த புரிதலை ஏற்படுத்தும். மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் குறிப்பாக மலைப்பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு போதுமான நீர் ஆதாரங்கள் உள்ளன.

இதற்காக சிறு நீர்நிலைகளையும் பயன்படுத்தலாம். இந்தக் கொள்கை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கும் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். தனியார் அல்லது ஒரு நிறுவனம், தனியார் பலர் இணைந்து உருவாக்கிய அமைப்பு ஆகியோர் இந்த சிறு புனல் மின் திட்டங்களை அமைக்கலாம். அல்லது சுய தேவைக்காகவும் அமைத்து, மின்சாரத்தை பரிமாறிக் கொள்ளலாம். இந்த கொள்கைப்படியான மின் திட்டங்களுக்கு தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனம் ஒப்புதல் அளிக்கும் நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைய 2030ம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கலவையை 22சதவீதத்திலிருந்து 50சதவீதமாக அதிகரிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. தற்போது, ​​தமிழ்நாட்டில் 2,321.90 மெகாவாட் திறன் கொண்ட புனல் நிலையங்கள் உள்ளன, மேலும் இதை 25சதவீம் அதிகரிக்க அரசு இலக்கு கொண்டுள்ளது.

The post புனல் மின்நிலைய உற்பத்தியை பெருக்க சிறுபுனல் மின் திட்ட கொள்கை-2024 வெளியீடு: அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: