உல்லாசமாக இருந்துவிட்டு வேறு பெண்ணுடன் காதலன் டும்..டும்..டும்..நிறுத்திய சென்னை காதலி: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 29 வயது வாலிபர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது, அவருடன் வேலை செய்யும் சென்னையை சேர்ந்த 32 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி வாலிபர் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தாராம். இந்நிலையில், அந்த வாலிபருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து, சில வாரங்களுக்கு முன்பு ஆரணியை சேர்ந்த 20 வயது பெண்ணுடன் வாலிபருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் திருமண வரவேற்பும், நேற்று காலை திருமணமும் நடைபெற இருந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த காதலி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வாலிபரிடம் நேரில் சென்று கேட்டுள்ளார்.

அதற்கு காதலன், என்னைவிட 3 வயது பெரியவள், அதனால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வாலிபரின் பெற்றோர், அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி, எனது மகன் திருமணத்தில் எந்த பிரச்னையும் செய்யாமல் இருக்க வேண்டும் எனக்கூறி ரூ.1 லட்சம் கொடுத்து, சமரசம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த வாலிபருக்கு ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணி அளவில், மணமகனின் காதலி சென்னையில் இருந்து தனது வழக்கறிஞருடன் திருமண மண்டபத்துக்குள் திடீரென நுழைந்தார். மணமேடையில் இருந்த மணமகளிடம், அந்த வாலிபர் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டு, உன்னை திருமணம் செய்வதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மணப்பெண், எனக்கு இந்த திருமணமே வேண்டாம் எனக்கூறி மேடையில் இருந்து எழுந்து அழுதுகொண்டே மண்டபத்தை விட்டு வெளியேறினார். இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

 

The post உல்லாசமாக இருந்துவிட்டு வேறு பெண்ணுடன் காதலன் டும்..டும்..டும்..நிறுத்திய சென்னை காதலி: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம் appeared first on Dinakaran.

Related Stories: