மோசடி வழக்கிலிருந்து தப்பிக்க பேரம் தேவநாதனை தப்ப விடக்கூடாது மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன தலைவர் தேவநாதன் நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்பு வைத்தவர்களுக்கு பணத்தை தராமல் மோசடி செய்ததாக வந்த புகாரை அடுத்து அவரும், மோசடியில் தொடர்புடைய சிலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், முதல் குற்றவாளியான தேவநாதன் யாதவ், சிறையில் இருந்தபடியே ஜாமீனில் வெளிவருவதற்கு தனது அடியாள் மூலம் சில முதலீட்டாளர்களோடு பேரம் பேசி சாட்சியங்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஆடியோக்கள் வெளியாகி உள்ளன.

இந்த சதிச் செயலில் பாஜவினரும் ஈடுபட்டுள்ளனர். இதனால் நிரந்தர வைப்பாளர்கள் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வெதும்பி வருகின்றனர். தேவநாதன் யாதவ் அரசியல் செல்வாக்கு மிக்கவர். பொதுஇடங்களில் பிரதமருடன் காணப்பட்டவர். சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி, சாட்சியங்களை கலைத்து வெளியே வந்தால், புகார் கொடுத்தவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி சட்டபூர்வ நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். குற்றவாளி தப்பி செல்லாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். விரைவு நீதிமன்றம் அமைத்து வழக்கை துரிதமாக விசாரித்து மக்கள் இழந்த பணத்தை மீட்டு தருவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மோசடி வழக்கிலிருந்து தப்பிக்க பேரம் தேவநாதனை தப்ப விடக்கூடாது மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: