மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வீல் சேர் இல்லாததால் மாற்று திறனாளிகள் சிரமம்

தஞ்சாவூர், செப். 5: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வீல் சேர் இல்லாததால் மாற்று திறனாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தினமும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து செல்கின்றனர். அதுவும் குறிப்பாக திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் திங்கட்கிழமை மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வருவார்கள். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் மாற்றுத்திறனாளிகள் சுலபமாக செல்வதற்காக சாய் தளம் வசதி செய்யப்பட்டுள்ளது. சாய் தளத்திற்கு செல்லும் பாதையில் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைப்பதால் அந்த பகுதியை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அவ்வாறு அந்த வழியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமத்துடன் படிகளில் ஏறி செல்கின்றனர். மேலும் மாற்று திறனாளிகளுக்கான வீல் சேர் எங்கு இருக்கிறது என்பது தெரியாத நிலையில் உள்ளது. வீல் சேர் வசதி இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே வீல் சேரை மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வீல் சேர் இல்லாததால் மாற்று திறனாளிகள் சிரமம் appeared first on Dinakaran.

Related Stories: