குடியரசுத் தலைவர், முதலமைச்சர் பதக்கங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்குகிறார்: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடக்கிறது

சென்னை: குடியரசுத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளுக்கு இன்று வழங்குகிறார். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை, ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் பணியில் மெச்சத்தகுந்த சேவை செய்ததாக காவல்துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உயரிய விருதுகளான இந்திய குடியரசு தலைவர் பதக்கங்கள் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல், தமிழ்நாடு அரசு சார்பிலும் பணியின் போது சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் மாலை 5 மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சகர் பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு வழங்குகிறார். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. பிறகு காவல்துறையின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. நிகழ்ச்சியில் காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் அருண், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

The post குடியரசுத் தலைவர், முதலமைச்சர் பதக்கங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்குகிறார்: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: