சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணிகளை களஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் எ.வ. வேலு

சென்னை: சென்னை, சைதாப்பேட்டை, M.C.இராஜா ஆண்கள் விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில், 1 இலட்ச சதுர அடி பரப்பளவில், தரைதளம் மற்றும் 10 தளங்களுடன்கூடிய ஆண்கள் விடுதிக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விடுதியில் 484 மாணவர்கள் தங்கும் வகையில், 121 அறைகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், விடுதி வார்டன் அறை, சமைலறை, உணவருந்தும் அறை, பொருள் வைப்பறைகள், பன்னோக்கு அறை, நூலக அறை, உடற்பயிற்சி அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து, கட்டுமான பணியை குறித்த காலத்திற்கு முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

மேலும், முத்தமிழறிஞர் கலைஞர், 1976 ஆம் ஆண்டு வள்ளுவர் கோட்டம், சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. தற்போது, முதலமைச்சர் ஆணையின்படி, வள்ளுவர் கோட்டம் நவீன உத்திகளைப் பயன்படுத்தி புனரமைப்புப் பணிகள் ரூ.80 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இவ்வளாகத்தில் உள்ள கலையரங்கம், குறள்மணி மாட கூரை புனரமைப்பு, தரைகள் புதுப்பித்தல், குறள் மணிமாட ஓவியம் சீரமைத்தல், வளாகச்சுற்றுச் சுவர் புதுப்பித்தல், தூண்கள், நுழைவாயில் பகுதிகளில் சிற்ப வேலைபாடுகள் புதுப்பித்தல், இரண்டு புதிய கவின்மிகு நுழைவுவாயில் அமைத்தல், மாற்றுத் திறனாளிகள் நடைபாதை அமைத்தல், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தேயக மின் தூக்கி அமைத்தல், வாகன நிறுத்துமிடம், உணவுக்கூடம், விற்பனை மையம், மழைநீர் வடிகால் வசதி, நடைபாதை வசதி, குடிநீர் வசதி, செயற்கை நீரூற்று அமைத்தல், ஒளி-ஒலி காட்சி அமைத்தல், சிதிலமைடைந்த மின்சாதனங்கள் மற்றும் மின் இணைப்புகள் மாற்றுதல், கூட்ட அரங்கம் மற்றும் குறள்மணி மாடத்தில் குளிர்சாதன வசதி ஏற்படுத்துதல், தீ தடுப்பு வசதிகள் அமைத்தல், ஒலிபெருக்கி அமைப்பு நிறுவுதல், நுழைவாயில் புதுப்பித்தல் பணி, உயர் அழுத்த மின் வசதி ஏற்படுத்துதல், 250 கே.வி.ஏ. ஜெனரெட்டர் மற்றும் CCTV பொருத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை களஆய்வு செய்த பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு புனரமைப்பு பணிகளை குறித்த காலத்திற்கு முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்த களஆய்வின்போது, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., ஆயிரம் விளக்கும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், முதன்மைத் தலைமைப் பொறியாளர் K.P. சத்தியமூர்த்தி, சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் மணிவண்ணன், சிறப்புப் பணி அலுவலர் இரா.விஸ்வநாத் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணிகளை களஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் எ.வ. வேலு appeared first on Dinakaran.

Related Stories: