கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு

 

திருமங்கலம், ஆக. 18: கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய போலீஸ்காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமங்கலம் அருகேயுள்ள புல்லமுத்தூரை சேர்ந்தவர் பாபுராஜ்(29). இவர் திருவாரூரில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருமங்கலத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி (25) என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சிறிது காலத்திற்கு பின்பு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் அவர்கள் வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் குடும்ப பிரச்னை ஏற்படவே செந்தமிழ்செல்வி திருமங்கலத்திலுள்ள தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு புல்லமுத்தூர் வந்த கணவர் பாபுராஜ பார்க்க மனைவி சென்றுள்ளார். அவரை மாமியார் வாசுகி தடுத்துள்ளார். அங்கு வந்த பாபுராஜ் தன்னுடன் சேர்ந்து வாழவேண்டும் எனில் மேலும் 5 பவுன் நகை மற்றும் புல்லட் வாங்கி தரவேண்டும் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தமிழ்ச்செல்வி, இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் தனது கணவர் பாபுராஜ், மாமனார் குணசேகர், மாமியார் வாசுகி, நாத்தனார் பாரதி ஆகியோர் மீது புகார் கொடுத்தார். இதுதொடர்பாக அவர்கள் மீது இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: