பிரதமர் வீட்டுவசதி திட்ட நிதியில் முறைகேடு செய்த 13 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கங்காதரன் என்பவர் 2021ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அப்போதைய இணை இயக்குனர் ஈஸ்வரன் விசாரணை நடத்தி 13 அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தரப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் விரைவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும், கையாடல் செய்த பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

The post பிரதமர் வீட்டுவசதி திட்ட நிதியில் முறைகேடு செய்த 13 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: