கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் நாளை மருத்துவர்கள் போராட்டம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 17) 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில் ஆக.8 ம் தேதி இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டர். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்தும், பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டும், சமரசமற்ற விசாரணை நடத்தக்கோரியும் மாணவர்களும் , மருத்துவர்களும் நாடு முழுவதும் தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை நாடு முழுவதும் 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூர குற்றம் மற்றும் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். அதே நேரம் அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் செயல்படும். அவசர வழக்குகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள். ஆனால் வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது.நவீன மருத்துவர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் அனைத்து துறைகளிலும் இந்த பணி புறக்கணிப்பு நடைபெறும். மருத்துவர்களின் நியாயமான போராட்டத்துக்கு தேசத்தின் ஆதரவை இந்திய மருத்துவர்கள் சங்கம் கோருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் நாளை மருத்துவர்கள் போராட்டம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: