போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

மஞ்சூர், ஆக.13: மஞ்சூர், பிக்கட்டி பள்ளிகளில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல்நிலையம் மற்றும் கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணியை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கீழ்குந்தா பேரூராட்சி செயல்அலுவலர் மனோகரன், தனிபிரிவு எஸ்.ஐ அப்பாஸ், எஸ்.ஐ சுரேஷ், பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பள்ளி வளாகத்தில் துவங்கி மஞ்சூர் பஜார், மணிக்கல்மட்டம் வரை சென்ற பேரணியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் மத்தியில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பேசியதாவது:
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் திருட்டு, கொள்ளை, அடிதடி, கொலை, பாலியல் தொந்தரவுகளில் மட்டுமின்றி தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகை போதை பொருட்களால் அதை பயன்படுத்துவோர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

சமுதாயம், கலாசார சீரழிவுகளுக்கும் போதை பழக்கம் காரணமாகிறது. அரசின் வழிகாட்டுதல் படி போதை பொருட்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. போதை பொருட்கள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவ, மாணவிகள் முன் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து, அனைவரும் போதை இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றனர். இதில் ஆசிரியர்கள் சீனிவாசன், ஜெகநாதன், அம்சவேணி, ஆர்த்தி, சாந்தி, கவிதா மற்றும் போலீசார், கீழ்குந்தா பேரூராட்சி ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
இதேபோல் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பிரியதர்ஷினி மெட்ரிக் பள்ளியில் காவல்துறை சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மஞ்சூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வன், சவுந்திரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பள்ளி தலைமையாசிரியை உமா மகேஸ்வரி வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்களை எழுப்பி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றார்கள். தொடர்ந்து பள்ளி மைதானத்தில் போதை பொருட்கள் இல்லா சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம் என மாணவ, மாணவிகள் உள்பட அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

The post போதை பொருள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: