லால்குடி அடுத்த புள்ளம்பாடி உதயநகர் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்

 

லால்குடி, ஆக.9: திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சி உதயநகரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கட்டிடங்கள் பழுதடைந்ததாலும், மழைக்காலங்களில் மழைநீர் உட்புகுவதாலும் புதிய கட்டிடம் வேண்டும் என பகுதிவாழ் பொதுமக்கள், ஆசிரியர்கள் லால்குடி சௌந்தர பாண்டியன் எம்எல்ஏ விடம் கோரிக்கை விடுத்தனர். அதனையொட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று முடிவுற்ற நிலையில், நேற்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரசியாகோல்டன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். புள்ளம்பாடி பேரூராட்சித் தலைவர் ஆலீஸ்செல்வராணி ஜோசப்செல்வராஜ், வட்டார கல்விஅலுவலர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் பங்கேற்று வகுப்பறையின் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து, குத்துவிளக்கேற்றி கல்வெட்டினை திறந்து வைத்து பேசினார்.

விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜீவானந்தம், ஆரோக்கியமேரி, முன்னாள் கவுன்சிலர் சரவணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆசிரியபெருமக்கள், ஒப்பந்தக்காரர் ரமேஷ், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சுசிலா வரவேற்றார். முடிவில் முன்னாள் தலைமையாசிரியர் கஸ்தூரி நன்றி கூறினார்.

The post லால்குடி அடுத்த புள்ளம்பாடி உதயநகர் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் appeared first on Dinakaran.

Related Stories: