பொதுஇடங்கள், நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் ரூ.5000 வரை அபராதம் : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை : சென்னையில் நீர்நிலை, பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டுமான பணியின்போது வெளியேற்றும் கட்டிட கழிவுகளை சாலையோரம், நீர்நிலைகளின் கரைகளில் கொட்டிச் செல்வதாக புகார் எழுந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், “நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கட்டிட கழிவுகளை கண்டறிந்து அகற்றிட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. அதன்படி, சென்னை முழுவதும் கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் சுமார் 7500 தூய்மைப் பணியாளர்கள் தீவிர தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 6310 டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. கட்டுமான பணியின்போது வெளியேற்றும் கட்டிட கழிவுகளை சாலையோரம், நீர்நிலைகளின் கரைகளில் கொட்டிச் செல்வதாக புகார்கள் எழுகின்றன. கட்டிட கழிவுகளை கொட்டுவதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. மழை பெய்யும்போது மழைநீருடன் சேர்ந்து சாலையில் கட்டிடக்கழிவுகள் தேங்கிவிடுகின்றன . மழைநீருடன் கட்டிட கழிவுகள் தேங்கி வடிகால்களில் மழைநீர் வெளியேற இடையூறாக அடைத்துக் கொள்கின்றன. ஆகவே அனுமதித்த இடங்கள் தவிர பொதுஇடங்கள், நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொதுஇடங்கள், நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் ரூ.5000 வரை அபராதம் : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: