புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு காவல்துறை கட்டுப்பாடு விதிப்பு!

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நட்சத்திர விடுதிகளுக்கு வரும் வாகனங்களை முறையாக சோதனையிட்டு பதிவு செய்ய வேண்டும். நட்சத்திர விடுதிகளில் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

2026ம் ஆண்டு புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், டிசம்பர் 31ம் தேதி மாலை 6 மணிமுதல், ஜனவரி 1ம் தேதி அதிகாலை 1 மணி வரை பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. கொண்டாட்டத்தின்போது எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில்,”நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் முறையாகச் சோதிக்கப்பட வேண்டும். அவை பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஹோட்டல்களில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிலும், விருந்து நடைபெறும் இடங்களிலும் கூட கேமரா அமைக்கப்பட வேண்டும்.

மேலும், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்காக தற்காலிக மேடைகள் அமைக்கப்படுமானால், அந்த மேடைகள் பாதுகாப்பாக உள்ளனவா எனச் சரிபார்க்க வேண்டும். தீயணைப்பு துறையிடமிருந்து தேவையான சான்றுகள் பெறப்பட வேண்டும். நீச்சல் குளத்தின் மீது அல்லது அதற்கு மிக அருகில் மேடை அமைக்கக் கூடாது. அனுமதி வழங்கப்பட்ட அரங்கு உள்ளேயே நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

நீச்சல் குளத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். ஹோட்டலுக்கு வரும் வாகனங்கள் அந்த ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்திலேயே நிறுத்தப்பட வேண்டும். சாலையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. மதுபானங்கள் அனுமதி வழங்கப்பட்ட இடத்திலேயே வழங்கப்பட வேண்டும். உணவு மற்றும் மதுபான சேவைகள் அதிகாலை 1 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். காவல்துறை நிர்ணயித்த நேர வரம்புகளை ஹோட்டல்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டுப்பாடுகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட சென்னையில் மெரீனா கடற்கரை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: