சிங்கப்பூர், துபாய், இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூ.5.6 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் பறிமுதல்: 9 கடத்தல் பயணிகள் கைது

சென்னை: சிங்கப்பூர், துபாய், இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வந்த ரூ.5.6 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 9 கடத்தல் பயணிகள் கைதாகியுள்ளனர். ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், தங்கத்துக்கான இறக்குமதி வரி வெகுவாக குறைக்கப்பட்டதால், இந்தியாவில் தங்கத்தின் சில்லறை விற்பனை விலை கணிசமாக குறைந்தது. ஆனால் அடுத்த சில தினங்களில் தங்கத்தின் விலை மீண்டும் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளதால், கடத்தல் ஆசாமிகள் தங்களுடைய கடத்தல் தொழிலை மீண்டும் தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து, சென்னைக்கு வரும் விமானங்களில் மிகப்பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த தனியார் பயணிகள் விமான பயணிகளை கண்காணித்து கொண்டிருந்த அதிகாரிகள், அதில் சந்தேகப்படும்படி வந்த 3 பயணிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதோடு அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்தபோது அவர்களுடைய உள்ளாடைகள், கைப்பைகள் போன்றவற்றில் தங்கக் கட்டிகள், தங்க பேஸ்ட்டுகள் மற்றும் தங்க நகைகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், அடுத்ததாக துபாயில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் தனியார் பயணிகள் விமானம், இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் தனியார் பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்களிலும், கடத்தல் குருவிகள் தங்க கட்டிகள், நகைகளுடன் வருவதாக தெரிவித்தனர். உடனடியாக தொடர்ந்து அந்த 2 விமானங்களில் வந்த பயணிகளையும் கண்காணித்து சந்தேகப்பட்ட 6 பயணிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.

அவர்கள் கைப்பைகளில் இருந்த ரகசிய அறைகள் மற்றும் ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்க நகைகள், தங்க கட்டிகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சிங்கப்பூர், துபாய், இலங்கை ஆகிய 3 விமானங்களில் வந்த 9 பயணிகளிடம் இருந்து, சுமார் 8 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.5.6 கோடி. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணிகள் 9 பேரையும் கைது செய்து, சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தங்கக் கடத்தல் அதிகரித்து, ஒரே நாளில் 3 விமானங்களில் வந்த 9 பயணிகளிடம், ரூ.5.6 கோடி மதிப்புடைய 8 கிலோ தங்கம் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சிங்கப்பூர், துபாய், இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூ.5.6 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் பறிமுதல்: 9 கடத்தல் பயணிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: