புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை, ஜூலை 31: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் 139-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, அவரது திருவுருவச்சிலைக்கு, மாவட்ட கலெக்டர் அருணா, மாலை அணிவித்து, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது; 2021-2022ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக்கோரிக்கையில் இந்தியாவின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர், இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், தமிழ்நாட்டின் சமூக சீர்த்திருத்த பெண்மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களுக்கு புதுக்கோட்டையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இவர்களின் பணியினை சிறப்பிக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் திருவுருவச் சிலையினை 10.5.2023 அன்று திறந்து வைக்கப்பட்டது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் 30.7.1886 அன்று பிறந்தார். அவரது 139-வது பிறந்த நாளினை கொண்டாடும் வகையில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, புதுக்கோட்டை ஆர்டிஓ ஐஸ்வர்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) மரு.ராஜ்மோகன், புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் விமலா, தாசில்தார் பரணி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர். இந்திராணி, மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: