கோவை மாநகராட்சி மேயர் தேர்வில் குளறுபடி கூடாது

 

கோவை, ஜூலை 31: கோவை அரசு மருத்துவமனையில் தாய்சேய் குழந்தைகள் பிரிவில் காத்திருப்போர் கூடம் ரூ.20 லட்சத்தில் கட்டப்படுகிறது. இந்த பணியை எம்எல்ஏ வானதி சீனிவாசன் துவங்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் செயல்படாமல் உள்ளது. இதனை பராமரிக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் மேலும் 5 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டு எம்.பி.க்கள் பேசும்போது கவனமாக தங்களின் கருத்துகளை கூற வேண்டும். நிதி அமைச்சர் குறித்து அவரது சமூகத்தை பற்றி பேசுவது சரியானது அல்ல. பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி செயல்பாடு மோசமாக உள்ளது. அவர் ஜனநாயக ரீதியாக பேச வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மாநிலங்கள் முடிவு செய்து கொள்ள ஏற்கனவே ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது மாநிலங்கள் சார்ந்த விஷயம் என தெளிவாக தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு புதிய மேயரை திமுக சார்பில் அறிவிக்கப்போவதாக கூறியுள்ளார்கள். மேயரை எவ்வித குளறுபடியும் இல்லாமல் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். ரயில் விபத்துகளை பொறுத்தவரை தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விபத்துகளை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில்நுட்ப கோளாறு என்றாலும் மனித கோளாறு என்றாலும் அதனை சரிசெய்து மக்களை காப்பது அரசின் கடமையாகும். அதனை மத்திய அரசு செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கோவை மாநகராட்சி மேயர் தேர்வில் குளறுபடி கூடாது appeared first on Dinakaran.

Related Stories: