பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ வழித்தடத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ₹1.74 கோடியில் ஒப்பந்தம்

பூந்தமல்லி, ஜூலை 27: பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ₹1.74 கோடிக்கு கையெழுத்தாகியுள்ளது. பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ஆர்வி அசோசியேட் நிறுவனத்திற்கு ₹1.74 கோடி கையெழுத்தானது. இந்த வழித்தடம் தோராயமாக 43.63 கி.மீ நீளத்திற்கு 19 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது. முழு நீளத்திற்கும் ட்ரோன்களைப் பயன்படுத்தி மண் ஆய்வு மற்றும் நிலப்பரப்பு ஆய்வுக்காக 100க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தில் ஆழ்துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

நவம்பர் 2024ம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும். இதற்கான ஏற்பு கடிதம் ஆர்வி அசோசியேட் நிறுவனத்திற்கு கடந்த ஜூன் 11ம் தேதி வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ், ஆர்வி அசோசியேட் நிறுவனத்தின் துணைத் தலைவர் கலீல் பாஷா மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ வழித்தடத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ₹1.74 கோடியில் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: