சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட் ஒருகிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தொடர் மழை காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஒரு வார காலமாக காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ கேரட் அதிகபட்சமாக ரூ.100க்கு விற்பனையானது. மேலும் சில காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வண்ண குடமிளகாய் ரூ.150, பச்சை மிளகாய் ரூ.90, இஞ்சி ரூ.160, எலுமிச்சை ரூ.120, பச்சைப் பட்டாணி ரூ.250 என விலை உயர்ந்து விற்பனையானது. இதேபோல் சின்ன வெங்காயம் ரூ.70, அவரை, காராமணி ரூ.60, சேனைக்கிழங்கு ரூ.75, பாகல், சேம்பு, காலிபிளவர், நூக்கல் ஆகியவை ரூ.50, தக்காளி ரூ.55 என விலை உயர்ந்துள்ளது. வெங்காயம், கத்தரி, பீர்க்கன் ரூ.40க்கும், சவ்சவ், முள்ளங்கி, புடலை, கோவைக்காய் கொத்தவரை ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டது. அனைத்து காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட் கிலோ ரூ.100க்கு விற்பனை appeared first on Dinakaran.