நரம்பியல் பிரச்சனையை தொடர்ந்து கொரோனா தொற்று.. அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுகிறாரா ஜோபிடன்!!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபிடன் நரம்பியல் பிரச்சனைகளால் தொடர்ந்து தடுமாறி வரக்கூடிய நிலையில், தற்போது கொரோனா தொற்றும் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதால் அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து அவர் விலகக்கூடும் என்று தெரிகிறது. அமெரிக்க அதிபருக்கான தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதிபர் ஜோபிடன் , டொனால்டு டிரம்ப் ஆகியோர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே 81 வயதான அதிபர் ஜோபிடன் நரம்பியல் பிரச்சனைகளால் பொது மேடைகளில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். குறிப்பாக நேரலை விவாதத்தின் போது, ட்ரம்பின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியது கடும் விமர்சனங்களை எழுப்பியது.

பொது மேடைகளில் துணை அதிபர் கமலா ஹாரிஸை ட்ரம்ப் என்றும் உக்ரைன் அதிபர் ஜெனலன்ஸ்கியை புடின் என்றும் குறிப்பிட்டதும் சர்ச்சையான ஆனது. இதையடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் முடிவை ஜோபிடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவரது ஜனநாயக கட்சி உறுப்பினர்களே வலியுறுத்தி வருகின்றனர். உடல்நலப் பிரச்சனை அதிகரித்ததால், அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோபிடனும் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனிடையே சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில், 3ல் 2 பங்கு ஜனநாயக கட்சியினர் அதிபர் போட்டியில் இருந்து ஜோபிடன் விலகி, மாற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்க கட்சியை அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அமெரிக்க அதிபருக்கு தேவையான மனத்திறன் ஜோபிடனுக்கு இருப்பதாக தெரியவில்லை என்றும் சுமார் 70% அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் லாஸ் வெகாஸில் பரப்புரை மேற்கொண்டு இருந்த ஜோபிடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது பிரச்சார நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் டெலாவரில் தனிமைப்படுத்தி கொண்டு வழக்கமான அலுவல்களை மேற்கொள்வார் என்றும் அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

The post நரம்பியல் பிரச்சனையை தொடர்ந்து கொரோனா தொற்று.. அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுகிறாரா ஜோபிடன்!! appeared first on Dinakaran.

Related Stories: