நெற்குன்றம் திருவாலீஸ்வரர் கோயிலுக்கு அறநிலையத்துறை தக்கார் நியமனம் செல்லும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு தக்கார் நியமித்த இந்து அறநிலைய துறையின் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம் இந்த கோயிலை எப்படி கிரயம் செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் நெற்குன்றம் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி கோயிலுக்கு இந்து அறநிலைய துறையால் நியமிக்கப்பட்ட தக்கார் நியமனத்தை எதிர்த்து ரவி கே.விஸ்வநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த கோயில் மற்றும் அதன் சொத்துக்கள் அனைத்தும் தனது தாத்தா நீலமேகம் பிள்ளை என்பவரால் கடந்த 1941ம் ஆண்டு கிரயப்பத்திரம் மூலம் எங்களுக்கு தரப்பட்டுள்ளது. இதனால் கோயில் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது. அறநிலையத் துறை இக்கோயிலில் நிர்வாகம் செலுத்த முடியாது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, அந்த கோயிலின் செயல் அலுவலரின் பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அதில், திருவாலீஸ்வரர் கோயில் 700 ஆண்டுகள் பழமையானது என்பதை தொல்லியல் துறை ஆய்வாளர் ராமமூர்த்தி உறுதி செய்துள்ளார். இந்து அறநிலைய சட்டப்படி 700 ஆண்டுகள் பழமையான கோயிலை கிரயப்பத்திரம் மூலமாக வாங்கவோ விற்கவோ முடியாது. தாத்தா பேரனுக்கு எவ்வாறு கிரயப்பத்திரம் எழுதி வைத்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி கோயிலுக்கு நியமிக்கப்பட்ட தக்கார் நியமனம் செல்லும் என்று உத்தரவிட்டு இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post நெற்குன்றம் திருவாலீஸ்வரர் கோயிலுக்கு அறநிலையத்துறை தக்கார் நியமனம் செல்லும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: