அயல்நாட்டு வேலை அருளும் திருமால்பாடி அரங்கநாதர்

அர்ச்சாரூபராய் பார்முழுதும் அருள்புரிந்துவரும் திருவரங்கன், திருமால்பாடி என்னுமிடத்தில் குளிர்ந்த ஏரிக்கரையின் மீது அமைந்த குன்றில், அனந்தசயன கோலத்தில் அடியார்களின் குறைகளைந்திட அதியற்புதமாக அருளாட்சி நடத்துகின்றார். பள்ளிக் கொண்ட கோலத்தில் அந்த பரந்தாமன் இங்கு எழுந்தருள காரணம் என்ன என்பதனைக் காண்போமா? ஸ்ரீ வேதவியாசரின் மகனான, கிளிமுகம் கொண்ட சுகப்பிரம்ம ரிஷி, இப்பகுதியில் வரும்போது விரஜாபுரி என்னும் (ஸ்ரீ வைகுண்டத்தில் பிரவாகிக்கும் புண்ணிய நதியின் பெயர் விரஜை) திருமால்பாடி குன்றின்மீது திருமாலை நோக்கி தவமிருந்தார். தவத்திற்கு இரங்கிய திருமால் தேவர்களுடன் கூடிய அரங்கநாதனாக தரிசனம் தந்து, வேண்டிய வரம் கேட்டார். சுகர் தனக்கு முக்திபேறு வேண்டினார்.

அதற்கு அரங்கநாதரோ. அருகில் உள்ள தீர்க்காசலம் என்னும் நெடுமலையில் தவம் புரியும்படியும், ராம அவதாரத்தின் போது இளவல் லட்சுமணன், அன்னை சீதாபிராட்டி மற்றும் அனுமன் புடைசூழ காட்சி தந்து முத்திப்பேறு தருவதாக வாக்களித்து மறைந்தார்.அதன்படி இக்குன்றில் தவத்தை முடித்து, அரங்கனின் கட்டளைப்படி நெடுமலையை அடைந்து, அங்கு மீண்டும் திருமாலைக் குறித்து தவமிருந்தார். பின்னர், ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவைக் கண்டு, வணங்கி, முக்தி நிலையை எய்தினார் சுகப்பிரம்ம ரிஷி.இந்த புராண பின்னணியை மனதில் கொண்டு கி.பி.1136 ஆம் ஆண்டு பராந்தக சோழனின் மகன் விக்கிரம சோழனால் இக்குன்றில் அரங்கநாதருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அதுமுதல் அடியார்களின் குறைகளை நீக்கி அற்புதமாக அருள்பாலித்து வருகின்றார் ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள்.

குளிர்ந்த ஏரி நீரில் பட்டு வீசும் தென்றலும், பூஞ்சோலைகளும் பசுமையான வயல்வெளிகளும் சூழ, அற்புதமான சிறு குன்றின் மீது கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீ ரங்கநாத பெருமாள். 108 திவ்ய தேசங்களை நினைவூட்டும் 108 படிகள் கடந்து மேலே செல்ல, முதலில் மேற்குப்புறமாக வசந்த மண்டபம் காணப்படுகின்றது. அடுத்ததாக, மூன்று நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. முன் மண்டபத்தின் இருபுறமும் கருங்கல் திண்ணைகள். உள்ளே.. மகா மண்டபத்தில் நேராக தென்திசையை பார்த்தபடி ஸ்ரீ வீரஆஞ்சநேயர். தரிசனமளிக்கின்றார். சற்று இடதுபுறம் திரும்பிட,ஸ்ரீ ரங்கநாயகி தாயார் அலங்கார ரூபத்தில், சர்வ மங்களங்களையும் அருளும் கடாட்சியாக, திருவருள் பொழிகின்றாள். அருகில் ஸ்ரீ நரசிம்மரது தரிசனம். மகாமண்டபம் கடந்து, பெரிய அந்தராளத்தை அடைந்து, எழில் சுரக்கும் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளை கண்குளிரக் கண்டு வணங்குகின்றோம்.

15 அடி நீளமுள்ள ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது மரக்காலை தலைக்கு வைத்தபடி, அனந்த சயனத்தில் பெருமாள் படுத்திருக்க, தலைமாட்டில் ஸ்ரீ தேவியும், கால்மாட்டில் பூதேவியும் அமர்ந்து, அரங்கனுக்கு சேவை புரிந்திட, திருப்பாதங்களின் அருகே பிரகலாதனும், சுகபிரம்ம ரிஷியும் தவம் கிடக்க, பரந்தாமனின் திருமுகமோ பக்தர்களை பார்த்தபடியிருக்க, இந்த பூலோக வைகுண்டத்தின் அழகு, அடடா… அடடா.. வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. நேரில் வந்து தரிசித்தால்தான் இந்த பேரானந்தம் புரியவரும்.தலைக்கு கீழே இரண்டு விரல்களையும் உள்ளே மடக்கி, மூன்று விரல்களை வெளியில் காட்டியபடி, யான் மூவுலகங்களையும் அளந்தவன் என சுட்டிக் காட்டுகின்றார். இவரது பார்வையோ, பக்தர்களைப் பார்க்கும்வண்ணம் உள்ளது வெகு விசேடமாகும். பக்தர்களின் குறைகளை தனது நயனத்தினாலேயே தீர்த்தருளும் திறத்தை நிரூபிக்கிறார்.

இவருக்கு முன்னே… உற்சவ மூர்த்தங்களாக ஸ்ரீ தேவி, பூதேவியுடனான சங்கு – சக்கரம் ஏந்திய ஸ்ரீ மஹாவிஷ்ணு சேவை சாதிக்கின்றார். அரங்கனின் அதியற்புத தரிசனம் முடித்து, ஆலய வலம் வருகையில் ஆண்டாளை தரிசிக்கின்றோம். சந்நதிக்கு வெளியே தனியாக சந்நதி கொண்டு, அரங்கனை பார்த்து கூப்பிய கரங்களோடு, நின்றபடி இருக்கும் பெரிய திருவடியான கருடாழ்வாரையும் தரிசிக்கின்றோம்.வடக்குப் புறமாக சிறுவாயில் ஒன்று உள்ளது. அதில் சில படிகள் வழியாக கீழே இறங்கிட, சுனை வடிவில் உள்ள தல தீர்த்தமான நாரத தீர்த்தத்தைக் காண்கின்றோம். பாறை மீது நின்றபடி கீழேயுள்ள ஏரியையும், சுற்றியுள்ள இயற்கை அழகையும் கண்டு பெருமகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் அடைகின்றோம்.

வானர கூட்டங்கள் இங்கு பெருமளவில் காணப்படுகின்றன. இங்கு சொர்க்கவாசலும் அமைந்துள்ளது. இங்கு சோழர் காலக் கல்வெட்டுகள் பெருமளவில் காணப்படுகின்றன. கி.பி.1140ல் முதலாம் குலோத்துங்கன், கி.பி. 1135ல் சகலலோகச் சக்கரவர்த்தி ராஜநாராயண சம்புவராயர், கி.பி. 1529ல் வீரசிங்கதேவரின் மகனான அச்சுத தேவமகாராயர் ஆகியோரால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட அநேக வைஷ்ணவ சம்பிரதாயங்களும் இங்கு விசேடமாக அனுசரிக்கப்படுகின்றன. திருமண பாக்கியம் மற்றும் குழந்தைப் பேறு வேண்டுவோர் இங்கு அரங்கனுக்குத் திருமஞ்சனம் செய்வித்து, நற்பலன் அடைகின்றனர்.

அரசு வேலை மற்றும் வேலையில் இடமாற்றம் வேண்டுவோர் பலர், இங்கு வழிபட்டு பலன் அடைந்துள்ளனர். அயல்நாட்டு வேலை வாய்ப்பும் இவ்வரங்கனின் அருளால் பலருக்கும் கிடைத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள இந்த திருமால்பாடி திருத்தலம், செஞ்சி – சேத்பட் பேருந்து சாலையில் உள்ள வளத்தியில் இருந்து தேசூர் செல்லும் வழியில் அருந்தோடு கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது. ஒரு முறை வந்து அரங்கனை கண்டு, சேவித்து, அளவில்லா ஆனந்தம் அடைவோம். நம் அருவினைகள் களைந்து, ஆனந்தம் பெறுவோம்.ஆலய தொடர்புக்கு:- திருமால்பாடி, சக்கரவர்த்தி பட்டர் – 98654 54998.

மோ.கணேஷ்

The post அயல்நாட்டு வேலை அருளும் திருமால்பாடி அரங்கநாதர் appeared first on Dinakaran.

Related Stories: