கிருஷ்ணலீலை

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், பல லீலைகளை நிகழ்த்தியிருந்தாலும், இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கும் லீலை சற்று வித்தியாசமானது. கிருஷ்ணன், சாளக்கிராம பூஜைகளை செய்து அதாவது தனக்குத்தானே பூஜைகளை செய்து நிகழ்த்திய அற்புதக் கதைதான் இது…மதுராவில், கிருஷ்ணனின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே சென்றது. கிருஷ்ணன், ஒவ்வொரு வீட்டினுள் நுழைந்து, பால், தயிர், வெண்ணெய் என்று, தான் உண்டதுபோக, மீதம் இருப்பதை, ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் தருவான்.மதுராவில் வசிக்கும் பெண்கள், இதனைத் தடுக்க ஏதேதோ திட்டங்களை வகுத்தார்கள். பலமுறை யசோதாவிடம் சொல்லியும் பயனில்லை. யசோதாவும் பல முறை கண்டித்தும், கிருஷ்ணனுக்கு தண்டனைகளை கொடுத்தும் பார்த்தாள், பலனில்லை. இப்படியாக இருக்க, கிருஷ்ணனின் தொந்தரவுகளை தாங்கிக் கொள்ள முடியாத ஒரு பெண், தன் வீட்டின் முன்னால் வாழை மரங்களை கட்டியும், வாசல் படிகளில் மாவிலைகளை அலங்கரித்தும், வீட்டுவாசலில் செம்மண் கோலத்தை இட்டும் அலங்கரித்தாள். கிருஷ்ணன் வீட்டினுள் வந்தான்.“நில் கிருஷ்ணா… எங்கள் வீட்டில் இன்று பண்டிகை. பார்த்தாயா… தோரணங்களையெல்லாம் கட்டிவுள்ளேன்.

நீ நாளை வா..’’ என்றாள் அந்த பெண். கிருஷ்ணன் அமைதியாக சென்றுவிட்டான். அந்த பெண்மணிக்கு ஒரே சந்தோஷம். இன்று சொன்னதைப்போல், நாளையும் ஏதாவது காரணத்தை சொல்லிவிடலாம். இப்படியே ஒரு ஐந்து நாட்கள் சென்றுவிட்டால், கிருஷ்ணன், நம் வீட்டுக்கு வருவதை மறந்துவிடுவான் என்று கணக்கிட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவாறே திரும்பினாள், மீண்டும் வாசலில் கிருஷ்ணன் வந்திருந்தான்.“இன்று உங்கள் வீட்டில் பண்டிகையை நடத்தி வைக்கும் பண்டிதருக்கு உடல்நிலை சரியில்லையாம். என்னை அனுப்பி உங்களிடம் சொல்லச் சொன்னார். பாவம், உங்களுக்கு வேறு பண்டிதர்கள்கூட கிடைக்கமாட்டார்கள். ஆகையால், நானே உங்கள் வீட்டில் சாளக்கிராம பூஜை செய்து, பண்டிகையை நடத்தி வைக்கிறேன்’’ என்று சுமார் 2001 வேத விற்பன்னர்களை அழைத்துக் கொண்டு, தானும் அந்த பெண்ணின் வீட்டிற்குள் சென்றான் கிருஷ்ணன்.கிருஷ்ணன், பூஜைகளைத் தொடங்கினான். பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்ய, நெய், தேன், பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் பழங்கள் என வீட்டில் உள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, அதை, தான் மட்டும் அனைத்தையும் உண்டு, சாளக்கிராமத்திற்கு ஒரே ஒரு துளி பஞ்சாமிர்தத்தைப் பூவினால் தொட்டு `ஸமர்ப்பயாமி’ என்றான், கிருஷ்ணன்.

இதனைக் கண்ட, அந்த பெண்ணின் கணவன், `கிருஷ்ணனை நீ அப்போதே அனுமதித்திருந்தால் வெறும் பால், வெண்ணெயோடு போயிருக்கும். இப்போது பாரு… கிருஷ்ணனுக்கு நெய், தேன், பாதாம், முந்திரி கலந்த பஞ்சாமிர்தம். எல்லாம் உன்னால் நடந்தவை’ என மனைவியை கடிந்துக் கொண்டான்.`ஹூம்… பூஜை முடிந்தது. அடுத்து நைவேத்தியம்! பதார்த்தங்களைக் கொண்டு வாருங்கள்.’ என்றான், கிருஷ்ணன். இனியும் கிருஷ்ணனிடம் உண்மையை சொல்லாவிட்டால், ஆபத்தாகிவிடும் என்று உணர்ந்த தம்பதிகள்;`கிருஷ்ணா… போதும் உன் விளையாட்டு. இன்று எங்கள் வீட்டில் பண்டிகையெல்லாம் கிடையாது. உன் சேட்டைகளை பொறுக்க முடியாது இப்படி ஒரு பொய்களை சொல்லிவிட்டோம். எங்களை மன்னித்துவிடு. எங்கள் வீட்டில் நைவேத்தியத்திற்கு ஒன்றும் கிடையாது’ என்று சரணாகதி ஆகினர்.எவர் ஒருவர் சரணாகதியாகிறாரோ, அவர்களுக்கு நம் கிருஷ்ணன் உடனே உள்ளம் குளிர்ந்து, அருள்வானே! அப்படி இங்கும் நடந்தது. அந்த தம்பதி வீடு, பெரிய மாளிகையாக மாறின. அவர்களுக்கு, பொன்னும் – பொருளும் கொடுத்தான், கிருஷ்ணன். இப்படி பல கிருஷ்ணனின் லீலைகள் இருக்கின்றன. அதில், ஒன்றைப் பார்த்தோம். கிருஷ்ணனின் லீலைகளை, அவனின் அற்புதத்தை தியானித்துக் கொண்டே இவ்வருட கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி மகிழ்வோம்.

ரா.ரெங்கராஜன்

The post கிருஷ்ணலீலை appeared first on Dinakaran.

Related Stories: